தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
பீஜிங்: சீன அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே நடந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பின்போது 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் நேற்று முன்தினம் நம் அண்டை நாடான சீனாவுக்கு சென்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பைத் தொடர்ந்து ரஷ்ய அதிபரும் சீனா சென்றதால், உலக அரசியல் அரங்கில் அது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தவும், நல்லுறவை மேம்படுத்தவும் ஷீ ஜின்பிங் மற்றும் புடின் இடையே பேச்சு நடந்தது.
இந்த சந்திப்பின் நிறைவில், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், உட்கட்டமைப்பு, ஊடகம், சினிமா, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் முக்கியமானவை :
* மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளில் இருந்து தப்பிக்க, இருதரப்பு வர்த்தகத்தை டாலருக்குப் பதிலாக, சீனாவின் யுவான் மற்றும் ரஷ்யாவின் ரூபிள் கரன்சிகளில் மேற்கொள்வதை உறுதிப்படுத்தும் நிதி உள்கட்டமைப்பு ஒப்பந்தம்
* வர்த்தக கட்டமைப்பின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்பப் பரிமாற்றங்களை மேம்படுத்தும் ஒப்பந்தம்
* எரிபொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல இரு நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு இடையே நிலையான வர்த்தக வழித்தடங்களை உருவாக்குதல்
* வர்த்தக சந்தையில் ஏகபோக ஆதிக்கத்தைத் தடுத்து, நியாயமான வர்த்தக நடைமுறைகளை உருவாக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஒப்பந்தம்
* ரஷ்யாவின் ‘ரொசாட்டம்’ அரசு நிறுவனம், சீனாவின் அணுமின் நிலையங்களில் புதிய மின் உற்பத்தி அலகுகளை கட்டமைத்து முடிப்பதற்கான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
சந்திப்பு குறித்து சீன அதிபர் ஷீ ஜின்பிங் கூறியுள்ளதாவது: மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போர் பதற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அது உலக வர்த்தகத்தை அடியோடு சீர்குலைத்துவிடும்.
பேச்சு மூலம் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும். போரை நிறுத்தி, ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தால் மட்டுமே உலகளாவிய எரிசக்தி வினியோகம், தொழில்துறை வினியோக சங்கிலி மற்றும் சர்வதேச வர்த்தக ஒழுங்கு ஆகியவை சீர்குலையாமல் தப்பிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Dinamalar