எந்தவொரு பணியிலும் உண்மையான வெற்றி அடைய ஆன்மிகத்தின் துணை அவசியம்; குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
பெங்களூரு; எந்தவொரு பணியிலும், நாம் உண்மையாகவே வெற்றி பெற விரும்பினால், ஆன்மிகத்தின் துணை இன்றியமையாதது என்று குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கூறினார்.
பெங்களூருவில் உள்ள ஆர்ட்ஆஃப் லிவிங் அமைப்பின் 45வது ஆண்டு விழா மற்றும் குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் 70வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. கூட்டத்தில் குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் உரையாற்றுகையில், ‘வணிகம் ஆன்மிகத்தால் வழிநடத்தப்பட வேண்டும். அரசியலும் ஆன்மிகத்தையே அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும். நாம் மேற்கொள்ளும் எந்தவொரு பணியிலும், நாம் உண்மையாகவே வெற்றி பெற விரும்பினால், ஆன்மிகத்தின் துணை இன்றியமையாதது’ என்றார்.
இந் நிகழ்வில் ஜம்மு காஷ்மீர் அமைச்சர் சதீஷ் சர்மா கலந்து கொண்டார். நிகழ்வில் அவர் பேசியதாவது;
எங்களின் இருண்ட காலங்களில் நீங்கள் துணையாக நின்று கரம் பற்றி வழி நடத்தினீர்கள். உங்கள் வழிகாட்டுதலின் மூலம், மன அழுத்தம் மற்றும் மன அதிர்ச்சிகளிலிருந்து நிவாரணம் கிடைத்தது. நாடு முழுவதிலும் செய்யப்பட்ட மிகச் சிறந்த பங்களிப்புகளில் இது ஒன்றாக திகழ்கிறது.
எங்கள் குழந்தைகள் பெற்ற நிவாரணமும், மன அமைதியும், என் பார்வையில், இந்தியா முழுவதிலும் செய்யப்பட்ட மிகச் சிறந்த பங்களிப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. ஒரு காலத்தில் நான் முற்றிலும் நொறுங்கிப் போயிருந்தேன். கோவிட் காலத்தில் என் தந்தையை இழந்திருந்தேன், நானும் மரணத்திலிருந்து நூலிழையில் தப்பித்தேன்.
நொறுங்கிப் போனவனாகவும், திசையற்றவனாகவும் உணர்ந்தேன்.அப்போதுதான் நான் என் குடும்பத்துடன் குருஜியின் ஆசிரமத்திற்கு வந்தேன். குருஜி அதிகம் பேசவில்லை, ஆனாலும் ஆழமான ஒன்றை உணர்த்தினார். 24 மாதங்களுக்குப் பிறகு, இன்று நான் ஏழு வெவ்வேறு துறைகளைக் கையாளும் ஒரு அமைச்சராக உங்கள் முன் நிற்கிறேன்.
2027 மற்றும் 2028ம் ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று நீங்கள் கணித்துள்ளீர்கள். அதை நோக்கியே நாங்கள் முன்னேறி வருகிறோம் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு சதீஷ் சர்மா பேசினார்.
ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, எம்பி சுனில் தட்கரே, திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப், இலங்கையின் முன்னாள் அமைச்சர் நவீன் திசநாயகே, தெலங்கானா எம்எல்ஏ தன்பால் சூர்யநாராயணா, ஒலிம்பிக் பாரா நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Source: Dinamalar