தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
ஆமதாபாத்: சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் குஜராத்திடம், 89 ரன்கள் வித்தியாசத்தில் விழுந்தது. இதன் மூலம் பிளே ஆப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்து, தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது.
ஆமதாபாத்தில் நடந்த லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத்துக்கு துவக்க வீரர்களாக கேப்டன் கில், சாய் சுதர்சன் களமிறங்கினர். கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் சேர்த்து 125 ரன் சேர்த்த போது, கில் 64 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, வந்த பட்லரும் அதிரடி ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
சாய் சுதர்சனும், பட்லரும் சென்னை பவுலிங்கை வெளுத்து வாங்கினர். இருவரும் அரைசதம் அடித்தனர். சாய் சுதர்சன் 84 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர் 27 பந்தில் 57 ரன் குவித்தார். குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன் சேர்த்தது. சென்னை அணியை பொறுத்தவரையில் முகேஷ் சவுத்ரி, ஸ்பென்சர் ஜான்சன், அன்சூல் கம்போஜ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
230 ரன் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னைக்கு, முதல் பந்திலேயே சாம்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக அவுட் ஆக, சென்னை அணி 13.4 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக துபே 47 ரன்கள் எடுத்தார். 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் அணி, புள்ளி பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
இந்த தோல்வியின் மூலம், 14 போட்டிகளில் 6 வெற்றிகள் மட்டுமே பெற்ற சென்னை அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது.
Source: Dinamalar