பெட்ரோலில் எத்தனால் கலப்பு 40 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்: மத்திய அரசிடம் ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
விஜயவாடா: “கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பை குறைக்கும் நோக்கில், பெட்ரோலில் எத்தனால் கலக்கும் வரம்பை, 20 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக்க வேண்டும்,” என, மத்திய அரசை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால், நாடு முழுதும் சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. நம் நாட்டின் எரிபொருள் தேவையில், 80 சதவீதம் இறக்குமதியை சார்ந்தே உள்ளது.
சமீபத்தில் டில்லி சென்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்தித்து பேசினார்.
இதன்பின், முதல்வர் சந்திரபாபு கூறியதாவது:
நாட்டில் பெட்ரோல் வினியோகத்தில், எத்தனால் கலப்பு விகிதம், 20 சதவீதமாக உள்ள நிலையில், அதை 40 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.
தென் அமெரிக்க நாடான பிரேசில் போன்ற நாடுகளில், எத்தனால் கலப்பு விகிதம் அதிகம் உள்ளது. எனவே, நம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும், பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி சுமையை குறைக்கவும் எத்தனால் கலப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும்.
நம் நாடு, 1.1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை சேமிக்கவும், கார்பன் உமிழ்வை, 500 லட்சம் டன் குறைக்கவும் தற்போது நடைமுறையில் உள்ள எத்தனால் கலப்பு திட்டம் உதவியது.
இதனால், நாடு முழுதும் உள்ள விவசாயிகள் கூட்டாக, 87,558 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளனர். எனவே, இந்த விகிதத்தை அதிகரித்தால் விவசாயிகள் கூடுதல் லாபம் ஈட்டுவர்.
எத்தனால் உற்பத்தியில் மக்காச்சோளம் முதன்மையான மூலப்பொருளாக உள்ளதால், அந்த பயிருக்கான தேவையும் கணிசமாக அதிகரிக்கும்.
ஆனால், மக்காச்சோள விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த குவின்டாலுக்கு, 2,400 ரூபாய் என்ற குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவில்லை.
எனவே, நாட்டின் நலனையும், விவசாயிகளின் நலனையும் பாதுகாக்க எத்தனால் கலப்பு விகிதத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
Source: Dinamalar