தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
புதுடில்லி: ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளர் சிவராஜ் ரகுநாத் மோடேகோன்கரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு நாடு முழுதும் கடந்த 3ம் தேதி நடந்தது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 22 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர்.
தேர்வுக்கு முன்பாகவே, இதற்கான வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, இந்தாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், டில்லி உட்பட பல்வேறு பகுதிகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக, நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மஹாராஷ்டிராவின் நாசிக்கைச் சேர்ந்த சுபம் கைர்னார், ராஜஸ்தானைச் சேர்ந்த தினேஷ் பிவால், மங்கிலால் பிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, நீட் வினாத்தாள் தயாரிப்பு குழுவில் இருந்த மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த முன்னாள் வேதியியல் பேராசிரியர் குல்கர்னி, பேராசிரியை மனிஷா மாந்தாரே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், ஏற்கனவே கைது செய்யப்பட்ட மனிஷா வாண்டாரே உதவியுடன், பயிற்சி வகுப்புகளில் பயின்ற மாணவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வினாத்தாளை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் அளித்த தகவலின்படி, மஹாராஷ்டிராவின் லத்துாரில் செயல்பட்ட ரேணுகாய் பயிற்சி வகுப்பில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், அதன் உரிமையாளர் சிவராஜ் ரகுநாத் மோடேகோன்கர் நீட் வினாத்தாளை, தேர்வு நடப்பதற்கு 10 நாட்கள் முன்பாகவே விலைக்கு வாங்கி, அதை மாணவர்களுக்கு கசிய விட்டது உறுதியானது.
அவரது மொபைல் போனில், 3ம் தேதி நடந்த தேர்விற்கான வினாத்தாள் நகல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நீட் வினாத்தாளையும், அதற்கான விடைகளையும் மாணவர்களுக்கு கையாலேயே எழுதி கொடுத்ததுடன், தேர்வு முடிந்த மறுநாள் அது தொடர்பான தடயங்கள் அனைத்தையும் சிவராஜ் அழித்ததும் விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து, அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்து தடயவியல் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை தொடர்ந்து நடந்து வருவதால், கைது எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு முகமை தலைவருக்கு சம்மன்! ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்படுவதாவது: காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தலைமையில், கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு செயல்படுகிறது. இது, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நாளை மறுநாள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை தலைவர் பிரதீப் குமார் ஜோஷிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது, ராதாகிருஷ்ணன் குழுவின் அறிக்கையின் பரிந்துரைப்படி என்.டி.ஏ.,வில் மேற்கொள்ள உள்ள சீர்திருத்தங்கள் குறித்தும், வினாத்தாள் கசிவு வழக்கின் நிலை பற்றியும் கேட்டறியப்படும். இந்த ஆலோசனையில் பங்கேற்க கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறைச் செயலர் வினீத் ஜோஷிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar