தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூட்டாக எழுதிய கட்டுரை இந்தியா – இத்தாலி இடையிலான உறவு தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
சமீப ஆண்டுகளில், இந்த உறவுகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் விரிவடைந்து, ஒரு சுமுகமான நட்பில் இருந்து, சுதந்திரம், ஜனநாயகம் ஆகிய மாண்புகளையும், எதிர்காலத்திற்கான ஒரு பொதுவான பார்வையையும் அடிப்படையாக கொண்ட, ஒரு சிறப்புமிக்க உத்திசார் கூட்டாண்மையாக பரிணமித்துள்ளன. சர்வதேச அமைப்புமுறை ஒரு ஆழமான மாற்றத்திற்கு உள்ளாகி வரும் இந்த காலக்கட்டத்தில், இத்தாலிக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கூட்டாண்மை, எங்கள் பொருளாதார ஆற்றல், சமூக படைப்பாற்றல் மற்றும் பல்லாயிரம் ஆண்டுகால நாகரிக ஞானம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு புதிய மற்றும் உயர்ந்த பரிமாணத்தையும் பெற்று வருகிறது.
புதிய இலக்குகளை அடைவதற்கும், எங்கள் பரஸ்பர ஆற்றல்களை ஒன்றிணைப்பதற்கும், இருதரப்பு உறவை ஆழப்படுத்தவும் பல்வகைப் படுத்தவும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.
புத்தாக்கம் ஒரு தொழில்துறை வல்லரசாக இத்தாலியின் நிலையை பிரதிபலிக்கும் வகையில், இத்தாலிய வடிவமைப்பு, உற்பத்தி திறன் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கும், 100-க்கும் மேற்பட்ட அதிக முதலீடு கொண்ட யூனிகார்ன் நிறுவனங்கள் மற்றும் 2 லட்சம் புத்தொழில் நிறுவனங்களைக் கொண்ட இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி, பொறியியல் திறமை, அதன் பரந்த செயல்பாடு, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு சூழலியலுக்கும் இடையே ஒரு சக்திவாய்ந்த ஒருங்கிணைப்பை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், இந்தியாவிற்கும் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், இரு திசைகளிலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க வழிவகுக்கிறது.
பாதுகாப்பு மற்றும் விண்வெளி, துாய்மையான தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள், ரசாயனங்கள், மருந்துகள், ஜவுளி, வேளாண்- உணவு, சுற்றுலா முதலிய துறைகளில் கவனம் செலுத்தி, 2029-ம் ஆண்டிற்குள் இத்தாலிக்கும், இந்தியாவிற்கும் இடையேயான 2.25 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக இலக்கை அடையவும், அதை மிஞ்சவும் நாங்கள் விரும்புகிறோம்.
தொலைநோக்கு பார்வை இச்சூழலில், ஐ.எம்.இ.சி., எனப்படும், இந்திய- மத்திய கிழக்கு -ஐரோப்பா பொருளாதார வழித்தடம், நவீன போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு, டிஜிட்டல் வலையமைப்புகள், எரிசக்தி அமைப்புமுறைகள் மற்றும் மீள்திறன் கொண்ட வினியோக தொடர்கள் ஆகியவற்றின் மூலம் எங்கள் பிராந்தியங்களை இணைப்பதை நோக்கமாக கொண்ட ஒரு தொலைநோக்கு பார்வையாகும்.
இந்த தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்காக, இந்தியாவும், இத்தாலியும் மற்ற கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளன.
எங்கள் நாடுகளுக்கு இடையேயான ஆழமான கூட்டாண்மை மற்றும் நீடித்த கலாசார பிணைப்புகளைப் பயன்படுத்தி, எங்கள் பொதுவான சவால்களை எங்களால் எதிர்கொள்ள முடியும்.
இந்திய கலாசாரத்தில், ‘தர்மம்’ எனும் கருத்துரு, எங்கள் செயல்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப் புணர்வை ஏற்படுத்துகிறது.
அதே சமயம், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இந்த டிஜிட்டல் யுகத்தில், ‘வசுதைவ குடும்பகம் – உலகம் ஒரு குடும்பம்’ என்ற கொள்கை வலிமையாக எதிரொலிக்கிறது.
இத்தகைய மாண்புகள், மறுமலர்ச்சிக் காலத்தில் வேரூன்றிய இத்தாலியின் மனிதநேய பாரம்பரியத்தில் இயல்பாகவே பிரதிபலிக்கின்றன.
அது ஒவ்வொரு தனிநபரின் மாண்பையும், மக்களையும், சமூகங்களையும் ஒன்றிணைக்கும் கலாசாரத்தின் ஆற்றலையும் எடுத்துக்காட்டுகிறது.
எனவே, எங்கள் பகிரப் பட்ட தொலைநோக்கு பார்வை, மக்களை மையமாகக் கொண்டு, ஒரு வலிமையான மற்றும் முற்போக்கான இந்திய- – இத்தாலி கூட்டாண்மைக்கு அடித்தளம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
Source: Dinamalar