தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
ஒஸ்லோ: ஐரோப்பிய நாடான நார்வேக்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, ஐஸ்லாந்து, பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளின் பிரதமர்களை தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்தினார். அப்போது, அந்தந்த நாடுகளுடன் வர்த்தகம், புதுப்பிக்கத்த எரிசக்தி உள்ளிட்ட துறைகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடி, கடந்த 15ம் தேதி டில்லியில் இருந்து மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றார். இந்நிலையில் ஸ்வீடனைத் தொடர்ந்து நார்வே சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஜோனஸ் கர்ஸ்டோரை சந்தித்து பேசினார்.
அப்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் காலநிலை சார்ந்த தொழில்நுட்பங்கள், கடற்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், விண்வெளி உட்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.இதைத்தொடர்ந்து, நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய ஐந்து நாடுகள் அடங்கிய நார்டிக் நாடுகளின் மூன்றாவது உச்சி மாநாடு நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்தது.
இதில் இந்தியாவுக்கும் நார்டிக் நாடுகளுக்கும் இடையே நீடித்த வளர்ச்சி, புத்தாக்கம், துாய்மையான ஆற்றல், வளரும் தொழில்நுட்பங்கள் துறை சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தவிர பிராந்திய அளவில் அமைதி மற்றும் எதிர்காலத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நார்டிக் நாடுகளுடனான வர்த்தக உறவை மேம்படுத்துவதுடன், முதலீட்டு தொடர்புகளை அதிகரிப்பதும் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, பசுமை தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இந்த மாநாடு துவங்கும் முன், ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாடோட்டிர், பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போ மற்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் ஆகியோரை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்தினார்.
அப்போது அந்தந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்துவது குறித்து அவர் விவாதித்தார். ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாடோட்டிரை, பிரதமர் மோடி சந்தித்து பேசியபோது, அந்நாட்டுடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மீன் வளம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார்.
இதேபோல் டென்மார்க் பிரதமர்மெட்டே பிரடெரிக்சனுடன் நடந்த சந்திப்பின்போது தொழில்துறை, பாதுகாப்பு, கப்பல் கட்டுமானம், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போவுடன் பிரதமர் மோடி நடத்திய சந்திப்பில், 6ஜி மற்றும் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், கல்வி, அணுசக்தி, காலநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருநாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது.அதன்பின், இத்தாலிக்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.
Source: Dinamalar