தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
வாஷிங்டன்: அமெரிக்கா – -ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சு எந்த முன்னேற்றமும் இன்றி நீடிப்பதால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் அறிகுறிகள் தெரிவதாக வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் மேற்காசிய நாடான ஈரான் இடையே, போர் ஒரு மாத காலம் நீடித்தது. இந்த போரில் அப்போதைய ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.இதனால் ஆத்திரமடைந்த ஈரான் மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கியது. மேலும், சவுதி, கத்தார், யு.ஏ.இ.,யில் உள்ள எரிசக்தி நிலையங்களை குறிவைத்து குண்டு வீசியது.
கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக, அமெரிக்கா – ஈரான் இடையே நடந்த முதல்கட்ட பேச்சு தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து இரு தரப்பும் மாறி மாறி நிபந்தனைகள் விதித்து வருவதால், இரண்டாவது கட்ட பேச்சு நடத்துவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கடுமையான பொருளாதார மற்றும் அணுசக்தி தடைகளுக்கு ஈரான் அடிபணிய மறுத்து வருவதே இந்த இழுபறிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஆக்சியோஸ்’ என்ற செய்தி இணையதளம், அதிபர் அலுவலகத்தை சேர்ந்த இரு அதிகாரிகளுடன் பேசிய போது கிடைத்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ஈரான் உடனான கடைசிகட்ட பேச்சில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், ஈரானுக்கு எதிராக புதிய ராணுவ தாக்குதல்களை தொடங்க அதிபர் டிரம்ப் தீவிரமாக பரிசீலித்து வருகிறார். சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப், ‘பேச்சு நடத்த ஈரானுக்கு மேலும் வாய்ப்பு கொடுக்க விரும்புகிறேன்’ என கூறியிருந்தார்.
ஆனால் அவரது நிலைப்பாடு தற்போது மாறியுள்ளது. ராணுவ நடிவடிக்கைக்கு பச்சை கொடி காட்ட தயாராகி உள்ளார். இறுதி முடிவாக மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு, அதன் பின் வெற்றியை அறிவித்து போரை விரைவாக முடித்துவிடும் வாய்ப்பு குறித்து டிரம்ப் விவாதித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் தேசிய பாதுகாப்புக் குழுவுடன் நடத்திய கூட்டத்தில், ஈரானுடனான பேச்சு தோல்வியுற்றால் எடுக்கக்கூடிய பல்வேறு ராணுவத் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வார இறுதி நாட்களில் நியூஜெர்சியில் உள்ள தனக்கு சொந்தமான கோல்ப் மைதானத்தில் செலவிடுவார். அத்திட்டம் ரத்து செய்யப்பட்டு நேற்று அவர் வாஷிங்டன் திரும்பினார். தன் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் திருமணத்துக்குக்கும் அதிபர் செல்லவில்லை.
அமெரிக்கா மீண்டும் ராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு சென்றார். அங்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் நேற்று பேச்சு நடத்தினார்.
Source: Dinamalar