NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா விலகுகிறார்? சிவகுமாருக்கு விட்டுத்தர ஒருவழியாக ஒப்புதல்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

பெங்களூரு: ‘கர்நாடக முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டு கொடுத்தால், உங்களை ராஜ்யசபா எம்.பி., ஆக்குவதுடன், உங்கள் மகன் யதீந்திராவுக்கு, துணை முதல்வர் பதவி வழங்குகிறோம்’ என, முதல்வர் சித்தராமையாவிடம், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியதை அடுத்து, முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டுத்தர சித்தராமையா ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் பதவிக்காக சித்தராமையா, சிவகுமார் இடையில் நிலவும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, கட்சி மேலிடம் இருவரையும் டில்லிக்கு அழைத்தது. நேற்று ( மே 25) இரவே, இருவரும் தனித்தனி விமானங்களில், தங்கள் ஆதரவாளர்களுடன் டில்லிக்கு பறந்தனர்.

டில்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு இன்று காலை சென்ற முதல்வர் சித்தராமையாவை, கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, கட்சியின் பொது செயலர் வேணுகோபால் ஆகியோர் வரவேற்று தனி அறைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் இருந்தார். சித்தராமையாவுடன், மூன்று பேரும் ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து, சிவகுமாருடனுடன் தனியாக ஆலோசனை செய்தனர். பின், சித்தராமையா, சிவகுமார் இருவரையும் நேருக்கு, நேர் அமர வைத்தும் பேசினர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுலும் அங்கு வந்தார். சித்தராமையாவை தனி அறைக்கு அழைத்து சென்று, அவரிடம் அரை மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின், ராகுல் புறப்பட்டு சென்றார். சித்தராமையா, சிவகுமார், மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கட்சி அலுவலகத்திலேயே மதிய உணவு சாப்பிட்டனர்.

இதை தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் இருந்து, மல்லிகார்ஜுன கார்கே தவிர, மற்ற நான்கு பேரும் வெளியே வந்தனர். வெளியே வந்த போது சிவகுமார் சிரித்த முகத்துடன் காணப்பட்டார்; சித்தராமையாவின் முகம் இறுகிய நிலையில் இருந்தது.

வேணுகோபால் கூறுகையில், ”கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவில் எம்.பி.,யாக உள்ள நான்கு பேரின் பதவிக்காலம், கர்நாடக மேல்சபையில் 7 பேரின் பதவிக்காலம் முடிவதால், தேர்தல் நடக்க உள்ளது. வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினோம். மற்ற எந்த விஷயம் பற்றியும் பேசவில்லை. யூகங்களுக்கு இடமில்லை,” என கூறினார்.

சித்தராமையா, சிவகுமார் ஊடகத்தினருக்கு பேட்டி அளிக்காமல், தனித்தனி காரில் ஏறி சென்று விட்டனர். இதையடுத்து, சித்தராமையாவும், சிவகுமாரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே, ராகுலும், சித்தராமையாவும் தனியாக ஆலோசனை நடத்திய போது, என்ன பேசினர் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

‘நீங்கள் எட்டு ஆண்டுகளாக முதல்வராக சிறப்பாக பணியாற்றி உள்ளீர்கள். உங்களை போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி, தேசிய அரசியலுக்கும் தேவை. நீங்கள் முதல்வர் பதவியை விட்டு கொடுத்தால், உங்களை ராஜ்யசபா எம்.பி., ஆக்குவதுடன், உங்கள் மகன் யதீந்திராவை கர்நாடக துணை முதல்வர் ஆக்குகிறேன்’ என, ராகுல் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

முதலில், இதை ஏற்க மறுத்த சித்தராமையா, பின் ஒருவழியாக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

எப்படியும் இன்னும் சில நாட்களில், முதல்வர் பதவி விவகாரத்தில், கட்சி மேலிடம் ஒரு முடிவு எடுப்பது உறுதி என, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is an independent National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP