பல்கலைகளின் வேந்தர் விஷயத்தில் திமுகவை பின்பற்ற தேவையில்லை: அமைச்சர் விஸ்வநாதன் கருத்து
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
மதுரை: ”தமிழக முதல்வர் தான் பல்கலைகளின் வேந்தர் என்ற தி.மு.க.,வின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடையாது,” என, உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி: உயர்கல்வி துறை சார்பில் நடக்கும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்து, வரும் ஜூன் 3ம் தேதி, துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்க உள்ளது. தமிழகத்தில் பல்கலைகளுக்கான வேந்தராக கவர்னர் உள்ள நிலையில், முதல்வரே பல்கலைகளின் வேந்தர் என்ற தி.மு.க., நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் த.வெ.க.,வுக்கு கிடையாது.
இது தொடர்பான கொள்கை முடிவுகளை, முதல்வர் விஜய் எடுப்பார்; அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
ஒரு கட்சியின் எம்.எல்.ஏ., அவர் விருப்பத்திற்கு ஏற்ப பதவியை ராஜினாமா செய்து விட்டு, அவர் விரும்பும் கட்சியில் இணைந்து, மீண்டும் மக்களை தான் சந்திக்க போகிறார். இதை குதிரை பேரமாக கருத தேவையில்லை; ஜனநாயகத்திற்கு விரோதம் எனவும் சொல்ல முடியாது.
கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காக, ஒரு செங்கலை வைக்கக்கூட அனுமதிக்க மாட்டோம். இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜயின் நிலைப்பாடு என்னவோ, அதில், தமிழக காங்கிரஸ் உறுதியாக நிற்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பல்கலைகளுக்கு வேந்தராக மாநில முதல்வர் செயல்படுவது என்பது, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட கொள்கை முடிவு. உச்ச நீதிமன்ற உத்தரவு பெற்ற பின், அதை மீறி, மாநில உரிமைகளை அடகு வைக்க துடிக்கும் த.வெ.க., கூட்டணி அரசின் காங்கிரஸ் அமைச்சரின் பேச்சு கண்டனத்திற்கு உரியது. திராவிட இயக்க ஆட்சி, தமிழகத்திற்கென கட்டமைத்த உயர்தனி கூறுகளை, இன்றைய பொய்க்கால் குதிரை அரசு கூறு போட்டு சிதைக்க முயல்வது, மாநில உரிமைகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம். அமைச்சர் விஸ்வநாதனின் இந்த கருத்து, முதல்வர் விஜயின் ஒப்புதலுடன் தான் பேசப்பட்டதா?
தமிழக முதல்வர் தான் மாநிலத்தில் உள்ள பல்கலைகளின் வேந்தர் என்ற, முந்தைய தி.மு.க., அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைகளின் வேந்தர் முதல்வர் தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து, பல்கலைகளுக்கு துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும். மாறாக, முதல்வர் தான் வேந்தர் என்ற நிலைப்பாட்டை மாற்ற, த.வெ.க., அரசு எந்த முயற்சியும் செய்யக் கூடாது. அப்படி செய்தால், அது மாநில அரசின் உரிமைகளை தாரைவார்ப்பதாகும்
Source: Dinamalar