டிரான்ஸ்பார்மர் ஊழல் விசாரணை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது; அமைச்சர் நிர்மல் குமார் தகவல்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
மதுரை: ”தி.மு.க.,வினர் என்ன செய்வதென்றே தெரியாமல், எங்கள் கூட்டணி கட்சியினருடன் தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள்,” என த.வெ.க.,வைச் சேர்ந்த அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., வினர் என்ன செய்வதென்றே தெரியாமல், எங்கள் கூட்டணி கட்சியினருடன் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். த.வெ.க., அரசுக்கு குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க., துாண்டி விடுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, மக்கள் விரோத செயல்களில், தி.மு.க., ஈடுபட்டதால் தான், மக்கள் அவர்களுக்கு சரியான பதிலை கொடுத்திருக்கிறார்கள். இப்போது, எங்களுடன் உள்ள விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் பிரச்னை செய்து தேவையில்லாமல் தகராறு செய்துள்ளனர்.
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், தலைமை மீது அதிருப்தியால், கட்சியிலிருந்து ராஜினாமா செய்கின்றனர். அதற்கும், த.வெ.க.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது அவர்களது தனிப்பட்ட விருப்பம். எங்கள் கட்சியில், அவர்கள் சேர்வதை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
மின் துறையில் கணக்கீட்டாளர்கள் 7 ஆயிரம் பேர் தேவை. ஆனால், 1500 பேர் மட்டுமே உள்ளனர். மின் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மின் துறையில் எங்கெல்லாம் ஊழல் நடக்கிறதோ, அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும். டிரான்ஸ்பார்மர் ஊழல் விசாரணை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட், யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
Source: Dinamalar